சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு

வாஷிங்டன்,

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.

இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), பாரி புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

இந்தநிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. கடைசி நேரத்த்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41ல் இருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டிருந்தநிலையில் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.