தெலங்கானா: `சட்டசபை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் முந்துமா காங்கிரஸ்?' – களநிலவரம் என்ன?

தெலங்கானாவில் கடந்த 2014 தேர்தலில் டி.ஆர்.எஸ் 11, காங்கிரஸ் 2, பா.ஜ.க, ஏ.ஐ.எம்.எம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. 2019 தேர்தலை பொறுத்தவரையில் டி.ஆர்.எஸ் 9, பா.ஜ.க 4, காங்கிரஸ் 3, ஏ.ஐ.எம்.எம் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. இந்தசூழலில்தான் கடந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது முறையாக முதல்வராகிவிடும் கனவில் இருந்தார், சந்திரசேகர் ராவ். அதேநேரம் கர்நாடகாவில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள விரும்பிய காங்கிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டது.

பாஜக

அதன் ஒருபகுதியாக மாநிலத் தலைவராக இருந்த உத்தம் குமார் ரெட்டி மாற்றப்பட்டு, ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டார். அவர் மாநில அரசின் மீதான தாக்குதலை மிகத்தீவிரமாக கையில் எடுத்தார். பதிலுக்கு பா.ஜ.கவும் பண்டி சஞ்சய்க்கு பதிலாக கிஷன் ரெட்டியை கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் முடிவில் 64 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் வெற்றியை ருசித்தது. இந்தசூழலில்தான் வரும் 13.5.2024 அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் மீண்டும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது. விட்ட இடத்தை பிடிப்பதில் பி.ஆர்.எஸ், பா.ஜ.க தீவிரம் காட்டி வருகின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி ஹைதராபாத் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.

தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரையில், ‘அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம்’ உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவு எடுபட்டுள்ளது. பிற மாநிலங்களை போலவே இங்கும் பாஜக 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரசாரத்தில் முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

சந்திரசேகர ராவ்

தெலங்கானா உருவாவதற்கு நாங்கள்தான் காரணம், மருத்துவக் கல்லூரிகள், நவோதையா பள்ளிகள் போன்றவற்றை தெலங்கானாவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பல காலம் ஆன பிறகும் காங்கிரஸின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாரத் ராஷ்ட்ர சமிதி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் சூழலில் களம் யாருக்குத்தான் சாதகமாக இருக்கிறது?

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் வியூக வகுப்பாளர்கள் சிலர், “இந்தமுறை 15 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதன்படி 2014, 2019 தேர்தலில் வெற்றியடைந்த நகர்குர்நூல், மல்காஜ்கிரி, போங்கீர், நல்கொண்டாவுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெத்தபள்ளி, மகபூப்நகர், கம்மம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தலா 7 சட்டமன்ற இடங்களையும், மகபூபாபாத், வாரங்கல் ஆகிய நாடாளுமன்ற இடங்களில் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும் காங்கிரஸ் வசம் உள்ளது. 1980-ல் இந்திரா காந்தியும், 1989 முதல் 1998 வரை பாக ரெட்டியும் ஜெயித்த மேடக் ஆகிய தொகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர செகந்திராபாத், ஜாகீராபாத், நிஜம்பாத், கரீம்நகர், மஹபூபாபாத் என 15 இடங்களுக்கு காங்கிரஸ் குறி வைத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதன் தொண்டர்கள் உற்சகமாக பணியாற்றி வருகிறார்கள்” என்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

பிஆர்எஸ் கட்சியின் உள் விவரங்களை அறிந்தோர், “சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் சோகத்தில் இருக்கிறார், சந்திரசேகர் ராவ். கூடவே மகள் கவிதாவின் கைது அவருக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெத்தப்பள்ளி எம்.பி வெங்கடேஷ் நேதா, வாரங்கல் எம்.பி தாயகர், செவெல்லா எம்.பி ரஞ்சித் ரெட்டி ஆகியோர் காங்கிரஸில் இணைத்துள்ளனர். நகர்குர்நூல் எம்.பி ராமுலு, ஜாகீராபாத் எம்.பி பாட்டீஸ் ஆகியோர் பா.ஜ.கவுக்கு தாவியுள்ளனர். இதுபோல் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு தாவி இருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க என இரு தேசிய கட்சிகளுக்கும் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பல தொகுதிகளில் வேட்பாளர்களும் பலம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். மேலும் பிஆர்எஸ் என்ற பெயர் சரியில்லை. மீண்டும் டிஆர்எஸ் என்றே பெயர் வைக்க வேண்டும் என்ற கலகக்குரல்களும் எழுந்துள்ளது. இதனால் சற்று கதறலில் தான் இருக்கிறார் சந்திரசேகர ராவ்” என்றனர்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சிலர் நம்மிடம், “சட்டப்பேரவை தேர்தலில் விட்டதை நாடாளுமன்றத்தில் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான திட்டம் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. விஜய் சங்கல்ப் யாத்ரா பேரணி மூலமாக பாஜக அரசு செய்த சாதனைகள் குறித்து மக்களிடத்தில் விளக்கி வருகிறோம். இந்தமுறை 10 தொகுதிகளை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.பிக்களான ராமுலு, பாட்டீஸ் வடக்கு தெலங்கானாவில் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எங்களுடன் இருப்பதால் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றனர்.

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பாஜக இந்துத்துவா பிரசாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான் காவி நிற உடை அணிந்து சென்ற மாணவரை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால் அவர்கள் கடந்தமுறையை விட கூடுதலான இடங்களை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ரேவந் ரெட்டி சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டார்கள். எனவே இந்தமுறை காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், “வரும் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் 14 இடங்களை பிடிக்கும். பா.ஜக, கேசிஆர் கூட்டு களவாணியாக இருக்கிறார்கள். அதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்” என்றார். பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்தியோ, “தெலங்கனாவில் கடத்த முறையைவிட கூடுதல் இடங்களை பிடிப்போம். அதற்கு ஏராளமான ஐடி நிறுவனங்களை கொண்டு வந்துள்ளது இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ், பிஆர்எஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் மோடியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.