ஈரோடு அருகே சாலையில் வேன் கவிழ்ந்தது – ரூ.666 கோடி தங்கம் மீட்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ரூ.666 கோடி மதிப்புள்ள 810 கிலோ தங்க கட்டிகளுடன் வந்த வேன் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி கடந்த 6-ம் தேதி இரவு 810 கிலோ தங்க கட்டிகளுடன் தனியார் வேன் வந்துகொண்டு இருந்தது. சசிகுமார் என்பவர் வேனை ஓட்டி வந்தார். கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் காயமடைந்தனர்.

இந்த வாகனத்தில், பிரத்யேக லாக்கர் வசதி வடிவமைக்கப்பட்டு இருந்ததால், தங்கத்துக்கு சேதம் ஏற்படவில்லை.

இதற்கிடையே, விபத்து பற்றிய தகவல் அறிந்து, சித்தோடு போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கம் இருந்த வேனை, பாதுகாப்பாக சித்தோடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், மற்றொரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ரூ.666 கோடி மதிப்புடைய 810 கிலோ தங்கம், சேலத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.