குமரியில் கடல் சீற்றம் எச்சரிக்கை நீடிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நேற்றும் கடல் சீற்றம் இருந்தது.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. மீனவர்களும், கடலோர பகுதிகளில்வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் ஆட்சியர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார். ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இதைப்போல் கடந்த 5-ம் தேதி கோடிமுனையில் இருவர், தேங்காய்பட்டினத்தில் ஒரு சிறுமி கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் கடற்கரை பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப் பட்டுள்ளது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீஸாரும் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தடங்கலின்றி நடைபெற்றது. கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.