‘4,491 அடி உயர’ வாக்குச்சாவடி, 160 வாக்காளர்கள் – சவாலான பயணத்துடன் தேர்தல் நடத்திய அதிகாரிகள்!

மும்பை: மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. அதில், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியின் ராய்ரேஷ்வரில் 4,491 அடி உயரத்தில் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் ஆணையத்தின் குழு பல்வேறு இன்னல்களை கடந்து சென்றடைந்து, வெற்றிகரமாக தங்களது பணியை செய்துள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் செவ்வாய்கிழமை 93 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியின் ராய்ரேஷ்வரில் 4,491 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் ஆணையத்தின் குழு சென்றடைந்தது. அதற்காக ராய்ரேஷ்வர் கோட்டையின் அடிவாரத்தில் பயணம் மேற்கொண்டனர். ரைரேஷ்வர் கோட்டை புனே அருகே உள்ளது. இது பல்வேறு மலைகள் மற்றும் கோட்டைகளுக்கு இடையில் உள்ளது.

புனே கிராமத்தில் உள்ள போர் தாலுகாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாக்குச் சாவடியை அடைய ரைரேஷ்வர் மலையடிவாரத்திற்குச் சென்றனர். அதன் வழியாக ஒரு மணி நேரம் நடைபயணம் மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியில் இறங்கி சென்றனர்.

அதாவது, அந்தத் தொகுதியில் மொத்தமே 160 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இது தொடர்பான ஒரு வீடியோவில், ஏழுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் அடங்கிய குழு, செங்குத்தான இரும்பு ஏணியில் இறங்கி வாக்குப் பொருட்களை முதுகில் சுமந்து செல்வதைக் காணலாம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றனர். அப்பகுதி சற்று கரடு முரடாக இருந்த போதிலும், வாக்குச்சாவடி ஊழியர்கள் வெற்றிகரமாக வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு சென்றனர்.

மகாராஷ்டிரா சுற்றுலாத் துறையின்படி, கடல் மட்டத்திலிருந்து 4,505 அடி உயரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைக்கோட்டை ரைரேஷ்வர் ஆகும். ரைரேஷ்வர் வாக்குச் சாவடி பாராமதி தொகுதியில் அமைந்துள்ளது. ரைரேஷ்வர் வாக்குச் சாவடி ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பாராமதி தொகுதிக்குள் வருகிறது. இந்த செயல் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.