சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி… பராமரிக்க மறுக்கும் தாய் குரங்கு!

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த 33 வயது செகானி என்ற கொரில்லாவுக்கு சிசேரியன் மூலமாக குட்டி பெண் கொரில்லா பிறந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் உள்ள செகானி என்ற கொரில்லா தன் நான்காவது குழந்தைப் பிறப்புக்காகத் தயாராகி வந்தது.

Gorilla (Representational image)

இந்த நேரத்தில், கொரில்லாவைப் பராமரிக்கும் உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்கள், செகானி, கர்ப்பகாலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீவிர உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பூங்காவின் கால்நடை மருத்துவர்கள் உள்ளூர் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்தனர்.

கொரில்லாவைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் தாய் மற்றும் குட்டியின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை (சிசேரியன்) அவசியம் என்று முடிவெடுத்தார். பின்னர் மகப்பேறு மருத்துவர் ஜேமி வாக்கர் எர்வி மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சை மருத்துவர் ராபர்ட் உர்ஸ்ப்ருங் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட அறுவை சிகிச்சை முடிவில் செகானிக்கு பெண் குட்டி பிறந்தது.

மருத்துவ குழுவால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட அறுவை சிகிச்சை முடிவில் செகானிக்கு பெண் குட்டி பிறந்தது.(Representational image)

பிறந்த குட்டிக்கு ‘ஜமீலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஸ்வாஹிலி மொழியில் ஜமீலா என்பதற்கு ‘அழகானவள்’ என்று அர்த்தம். ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவின் 115 ஆண்டுக்கால வரலாற்றில் சிசேரியன் மூலம் பிறந்த முதல் கொரில்லா இது என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இது குறித்து பேசிய மகப்பேறு மருத்துவர் ஜேமி வாக்கர் எர்வி, ” ஜமீலாவின் பிறப்பு எனது அறுவை சிகிச்சை அனுபவத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு. நான் சிகிச்சை அளிக்கும் மனிதர்களுடன் செகானியின் உடற்கூறியியல் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்” என்றார்.

மருத்துவர் ராபர்ட் உர்ஸ்ப்ருங் கூறுகையில்,”பிரசவத்துக்குப் பிறகு குட்டி கொரில்லாவுக்கு சுவாசப் பிரச்சனை இருந்தது. தற்போது குழந்தை மற்றும் தாய் இருவரும் முழு நலத்துடன் உள்ளனர். ஆனால், இன்னும் தன் குட்டியைப் பராமரிப்பதில் செகானி அக்கறை காட்டவில்லை. தாயையும் குட்டியையும் இணைக்க பலமுறை முயன்றபோதும் செகானி ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கான காரணத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது கடினம்” என்றார்.

தாயையும் குட்டியையும் இணைக்க பலமுறை முயற்சித்தபோதும் செகானி ஏற்றுக்கொள்ளவில்லை. (Representational image)

சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததால் இயற்கையான பிரசவத்துடன் தொடர்புடைய ஹார்மோன் உணர்வுகளை தாய் அனுபவிக்காததால் இவ்வாறு நடக்காலம் என உயிரியல் பூங்காவின் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். ஜமீலாவை பராமரிக்கவும் வாடகைத் தாயாகவும் செயல்பட 24 வயதான பெண் கொரில்லா கிரேசிக்கு பயிற்சி அளித்து வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.