டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொது மக்கள் சாலை மறியல் @ கிருஷ்ணகிரி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அரசு மதுபானக்கடையை அகற்றக் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், தேன்கனிக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தேன்கனிக்கோட்டை சாலையில் இரு அரசு மதுபானக்கடைகள் உள்ளன. இந்த மதுபானக்கடைகள் சாலையோரத்தில் உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், புதன்கிழமை மாலை சின்னட்டியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (55) என்பவர் கெலமங்கலத்துக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அறிந்த சின்னட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாலை ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட ஸ்ரீனிவாஸ் உடலை வைத்து மதுபானக்கடை முன்பு திரண்டு மதுக்கடையை அகற்ற வேண்டும் என தேன்கனிக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்னர். அப்போது கெலமங்கலத்தை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து மறியலில் ஈடுப்பட்னர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விபத்தில் உயிரிழந்த ஸ்ரீனிவாஸ்

ஆனால் மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள் கடையை அகற்றினால் மட்டுமே போரட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் எஸ்பி தங்கதுரை தொலைபேசி மூலம் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் மதுக்கடையை உறுதியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.