தந்தையின் மரணம், பிஞ்சு கைகளில் சப்பாத்தி சுடும் வேலை; 10 வயது சிறுவனின் வீடியோ!- கலங்கிய மக்கள்

வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோவொரு தாங்க முடியாத இழப்புகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையுடன் இந்த வாழ்வை வாழ்ந்தாக வேண்டும். அவ்வப்போது நம் கண்களில் படும் மனிதர்கள் நமக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படித்தான் டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஜஸ்பிரீட்டின் வாழ்க்கைக் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் வாழ்கையில் நம்பிக்கையை விதைத்து வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த 10வயது சிறுவனான ஜஸ்பிரீட் தந்தையை இழந்துவிட்டார். ஜாஸ்பிரீட்டின் தந்தை டெல்லியின் திலக் நகர் வீதியில் சிறு கடை வைத்து சப்பாத்தி ரோல்கள் விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவரது இழப்பிற்குப் பிறகு தனது தந்தை செய்து வந்த வேலையைச் செய்யும் நிர்பந்தம்  ஜாஸ்பிரீட்டிற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்த 10 வயதில் தந்தை இழந்ததுடன், அவர் மறைந்த பத்தே நாள்களில் தந்தை செய்து வந்த வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார் ஜஸ்பிரீட். படிக்கும் இந்த வயதில் தந்தையை இழந்துவிட்டு, தனது குடும்பத்தின் பாரத்தை சுமக்கத் தயாராகியிருக்கிறார். டெல்லி திலக் நகர் வீதியில் தனது பிஞ்சுக் கைகளால் சப்பாத்திகளைச் சுடும் ஜஸ்பிரீட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இதைக் கண்ட பலரும் ஜஸ்பிரீட்டிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ஜஸ்பிரீட்டின் கதையை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்து, “ஜஸ்பிரீட்டின் இந்தத் தன்னப்பிக்கை, தைரியத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஆனால், அதேசமயம் இந்தச் சிறுவயதில் ஜஸ்பிரீட் தனது படிப்பைக் கைவிட்டுவிடக் கூடாது. ஜஸ்பிரீட்டை தொடர்புகொள்ள வேண்டும், அவரது முகவரி, ஃபோன் நம்பர் தெரிந்தால் தெரிவிக்கவும். மஹிந்திரா குழுமம் அவரது படிப்பிற்கு நிச்சயம் உதவிகள் செய்யும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் ஜஸ்பிரீட்டிற்கு உதவ முன்வந்துள்ளனர். 

அர்ஜீன் கபூரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இதையடுத்தத் தற்போது பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரும், “ஜஸ்பிரீட்டின் முகத்தில் இருக்கும் சிரிப்பு, அவர் நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் குணம் என்னை வியக்க வைக்கிறது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். யாரேனும் அவரைத் தொடர்புகொள்ள உதவி செய்யுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்தக் காணொலியை வைரல் செய்ய, பலரும் ஜஸ்பிரீட்டிற்கு உதவ முன்வந்த வண்ணமிருக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.