`பிரசாரம் செய்வது அடிப்படை உரிமை அல்ல!' – கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ED

டெல்லியில் மே 25-ம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலை ஜாமீனில் வெளியில் எடுக்க ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் போராடிவருகிறது. இது தொடர்பான கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுமா, வழங்கப்படாதா என்று உச்ச நீதிமன்றம் நாளை முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

கெஜ்ரிவால்

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுமீது நடைபெற்ற விசாரணையில்கூட, `அரசியல்வாதி என்பதற்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது சாதாரண மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்’ என்று அமலாக்கத்துறை கூறியது. அதேசமயம், `ஒருவேளை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுமானால் முதல்வராக கெஜ்ரிவால் எந்தவொரு அரசு ஆவணத்திலும் கையெழுத்திடக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, `பிரசார உரிமை ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல’ என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

அமலாக்கத்துறை துணை இயக்குநர் பானு பிரியா தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரத்தில், “தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்ல. அமலாக்கத்துறைக்கு தெரிந்தவரை, ஒருவர் வேட்பாளராக இல்லாவிட்டாலும்கூட பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை. வேட்பாளருக்குக்கூட பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.

அமலாக்கத்துறை

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 123 தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அப்படி, தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் அளித்தால், வருடம் முழுவதும் தேர்தல் நடைபெறுவதால் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து, நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது. ஒருவேளை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அது மீளமுடியாத விளைவை ஏற்படுத்தும். அதோடு, சிறப்பு சலுகையாக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது சட்டத்தின் ஆட்சி மற்றும் சமத்துவத்தின்மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், இது நாட்டில் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட சாதாரண மக்கள் மற்றும் தேர்தல் பிரசாரத்துக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சட்டங்களிலிருந்து விலக்கு பெறக்கூடிய அரசியல்வாதிகள் ஆகிய இரண்டு தனித்தனி பிரிவுகளை உருவாக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.