உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வெளியானாலும், கடந்த 8 நாட்களில் 9,000 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைன் தரப்பில் இருந்தே குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். மட்டுமின்றி, வெளியாகும் புகைப்படங்களும் குறித்த தகவலை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்ளும் உக்ரைன் துருப்புகளை உண்மையான மண்ணின் மக்கள் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக சூளுரைத்த ரஷ்யாவின் கொடூர திட்டத்தை உக்ரைன் வீரர்கள் மொத்தமாக முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 8 நாட்களில் மட்டும், 9000 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மண்ணில் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனுக்குள் களமிறக்கப்பட்டுள்ள இளம் துருப்புகளை, குழப்பமடைந்த சிறார்கள் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, உடனடியாக வீடு திரும்புங்கள், உங்கள் பெற்றோர்கள் காத்திருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய துருப்புகளின் இதுவரையான பலி எண்ணிக்கை 9,000 என உக்ரைன் கூறி வந்தாலும், 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,600 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, 150 ரஷ்ய வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று உக்ரைன் துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானதில், வெறும் 18 வீரர்கள் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய நகரம் ஒன்றிற்கு 45 சவப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தாக்குதலுக்கு மொத்தம் 120,000 வீரர்களை ரஷ்யா களமிறக்கியுள்ளது.
ஆனால் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டாங்கிகள் முன்னேற முடியாமல் போயுள்ளது என்பதுடன், வீரர்கள் உணவு பற்றாக்குறையால் தவித்துப்போயுள்ளனர்.
மட்டுமின்றி, இந்த 8 நாட்களில் ரஷ்ய ராணுவத்தின் முதன்மை தளபதிகளில் ஒருவரான Major-General Andrey Sukhovetsky கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
48 மணி நேரத்தில் உக்ரைன் நாட்டை கைப்பற்றி விடலாம் என புடின் போட்ட தப்புக்கணக்கும், போர் வீரர்களாக கொண்டாடப்படுவோம் என நம்பிய ரஷ்ய துருப்புகளும் தற்போது செய்வதறியாது உக்ரைனில் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், உக்ரைன் நகரங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்தி ரஷ்ய துருப்புகள் முன்னேறி வருவதாகவே சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.