கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ தேர்வாணையம் மூலமாக 3,200 செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்த சமயத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகப் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு செவிலியர்களுடன் மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமீபத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2,400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாகவும், மீதமுள்ள 800 செவிலியர்கள் பின்வரும் காலங்களில் காலிப்பணியிடங்களுக்குத் தகுந்தாற்போல் பணியமர்த்தப்படுவார்கள் என்று மருத்துவத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31-ம் தேதியோடு, அந்த 800 செவிலியர்கள் நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அந்த செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்களின் பணிக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் டி.எம்.எஸ் வளாகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
போராட்டம் நடத்த முயன்ற செவிலியர்களை அங்கிருந்த காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக் கூடத்துக்குக் கொண்டு சென்றனர். மேலும் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு, பல்வேறு சமுதாயக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா காலத்தில் பணியாற்றிய 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 800 செவிலியர்களுக்கு மட்டும் பணி வழங்க முடியாத சூழல் உள்ளது. அந்த 800 செவிலியர்களுக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒருவரை கூட விட்டுவிடாது பணி வழங்கவேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, அவர்கள் அனைவருக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கண்டிப்பாகப் பணி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தப் பிறகு இந்த போராட்டம் நடந்தது. பேரிடர் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் கண்டிப்பாகப் பணி வழங்கப்படும்” என்றார்.