தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.
அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பே அதில் முறைகேடு நடந்துள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசுகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.
டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடந்துள்ளதாகவும், நஷ்டம்ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் 2 நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. தவறு நடந்துள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளாக டெண்டர் விடுவதில் என்ன முறை பின்பற்றப்பட்டதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். எதையும் மாற்றவில்லை. அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.