திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு சென்றடைந்தார்.
பின்னர் கார் மூலம் காந்திகிராம் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டுள்ளார். வழி நெடுகிலும் திரளான மக்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். வழியில் காரில் இருந்து வெளியே வந்து பாதுகாப்பு படையினர் சூழ பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கையைசைத்தார். இதனால் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
வழிநெடுகிலும் திமுக, பாஜக கொடிகள் நடப்பட்டுள்ளன. தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ரோடு ஷோ என்பது வெகுஜன மக்களை ஈர்க்கும் அரசியலாக தலைவர்கள் கையாண்டு வருகின்றனர்.
தங்களது சுற்றுப்பயணத்தின் போது திடீரென கீழே இறங்கி வந்து மக்களுடன் நெருக்கமாக சென்று சந்திப்பது, கை குலுப்பது, பேசுவது, சிரிப்பது என ஆரவாரம் செய்வர். இது அந்த தலைவர் மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்தும். அதை பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் தவறாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார். பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு விருது வழங்கி கவுரவித்தார். அப்போது அவரிடம் சில வார்த்தைகள் பிரதமர் மோடி பேசியதை பார்க்க முடிந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இளையராஜா சில வார்த்தைகள் பேசினார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, காந்திகிராம் என்பதை மகாத்மா காந்தி தான் தொடங்கி வைத்தார். காந்தி எண்ணங்களை, கனவுகளை கிராமப்புற மேம்பாட்டில் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.