சென்னை: “வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.
நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை.
கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை. (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2023
சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.