தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் தலைவர் சு. பழனிசாமி, “கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக உருவாக்கப்பட்டது தான் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம்.
1967-ம் ஆண்டில் இருந்து, தற்போது வரை பரம்பிக்குளம் பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. 1967 -ம் ஆண்டு வாய்க்கால் பாசனத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட கிணறுகளில் மின் இணைப்பு இருந்தால் துண்டிக்கப்படும் என சட்டம் போட்டிருந்தனர்.
1967-ம் ஆண்டு 2.60 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் தான் பயனடைந்து வந்தது. அது படிப்படியாக உயர்ந்து தற்போது 4.25 லட்சம் ஏக்கராக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கிணறுகளின் மின் இணைப்புகளை துண்டிக்க போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கிணறுகளே இல்லை.
கிணறுகளே இல்லாத இடத்தில் மின் இணைப்பை துண்டிப்போம் என கூறியுள்ளதால், விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். அந்தப் பகுதி தென்னை விவசாயம் சார்ந்தது. தேங்காய், மட்டை, கொப்பரை எதற்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் இணைப்பு துண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர், மின்சாரத்தைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் விவசாய நிலத்தில் செய்வதுதான் வருத்தமளிக்கிறது. முதல்வர், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சர் விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிப்பதைத் தடுக்க வேண்டும்.
இதுகுறித்து நீதிமன்றத்தை அணுக உள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.