இடிந்து விழுந்த பாதாள கால்வாய் – சிக்கி தவித்த தொழிலாளர்களில் 5 பேர் மீட்பு

ஸ்லீமனாபாத்:
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்ற இடத்தில் நர்மதா நதி வலது கரையில் பர்கி பாதாளக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. 
நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவால் பாதாளக் கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 
மாநில பேரிடர் மீட்பு படைகள் வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றது. அதிகாலை வரை5 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 4 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. 
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.