கடத்தப்பட்ட கணவருக்கு என்னாச்சோ?.. கைக்குழந்தையுடன் காட்டுக்குள் போன மனைவி!

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கணவனைத் தேடி அவரது மனைவியும், மகளும் காட்டுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டிஸ்கர்
மாநிலத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் அசோக் பவார். இவரையும், இவரது உதவியாளர் ஆனந்த்யாதவ் என்பவரையும்
மாவோயிஸ்டுகள்
, சமீபத்தில் கடத்திச் சென்று விட்டனர். இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

தனது கணவரை மாவோயிஸ்டுகள் கருணையுடன் விடுவிக்க வேண்டும் என்று அசோக் பவாரின் மனைவி
சோனாலி பவார்
கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அசோக் பவார் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தானே காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளைச் சந்தித்து தனது கணவரை மீட்க முடிவு செய்தார் சோனாலி.

இதையடுத்து சோனாலியும், அவரது மகளும் பவார் கடத்திச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்ட அபுஜுமாத் காட்டுக்குள் சென்றனர். இந்த நிலையில் பவாரும், யாதவும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இருவரும் பீஜப்பூரில் உள்ள குற்று என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சோனாலியும், அவரது மகளும் இன்னும் வரவில்லை, காட்டுக்குள்தான் உள்ளனர்.

அவர் போலீஸாருடனும், சில பத்திரிகையாளர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். விரைவில் குற்று பகுதிக்கு சோனாலியும், அவரது மகளும் வந்து சேருவார்கள் என்று உதவி போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் சுக்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து சோனாலி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தங்களது தந்தை கடத்தப்பட்டது முதல் தனது இரு மகள்களும் சோகத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அடர்ந்த காட்டுக்குள் தனது இளைய மகளைக் (அவருக்கு இரண்டரை வயதுதான்) கூட்டிக் கொண்டு தனியாகவே அவர் போய் விட்டார்.

சோனாலியின் மூத்த மகளுக்கு 5 வயதாகிறது. அவர் தற்போது தனது உறவினர்களுடன் தங்கியிருக்கிறார். பவார் குடும்பத்தினர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சட்டிஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பெத்ரே – நுகுர் கிராமத்தில் உள்ள இந்திராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுகிறது. தனியார் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில்தான் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது கணவரை மீட்பதற்காக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த, அடர்ந்த காட்டுக்குள் போன சோனாலியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், அவரது துணிச்சல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.