கடலில் பாதி மூழ்கிய இலங்கை படகு மீட்பு இந்தியாவில் தீவிரவாத அமைப்பு ஊடுருவலா: ஆந்திராவில் கடற்படை அதிகாரிகள் விசாரணை

திருமலை: ஆந்திராவில் கடலில் பாதி மூழ்கிய நிலையில் படகு மீட்கப்பட்டது. இதனால், தீவிரவாத அமைப்பை சேர்ந்த யாராவது ஊடுருவினார்களா? என கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் இருந்து 4.4 கி.மீட்டர் தொலைவில் ஒரு படகு பாதி மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டனர். இது குறித்து துறைமுகத்தில் உள்ள மரைன் போலீசார், கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே படகுகளில் சென்ற அதிகாரிகள் பாதி மூழ்கிய படகை, மற்றொரு படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். படகில் எழுதப்பட்ட எழுத்துக்கள் மற்றும் எண்களை கொண்டு இலங்கை படகு என அடையாளம் காணப்பட்டது. படகில் வலைகள் மட்டுமே உள்ள நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க வந்தபோது விபத்து ஏற்பட்டதில் மீனவர்கள் மட்டும் தப்பித்து சென்றதால் படகு அடித்து வரப்பட்டதா?, அல்லது தீவிரவாத அமைப்பை சேர்ந்த யாராவது இந்த படகில் இந்தியாவிற்குள் ஊடுருவினார்களா? என கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.