கர்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டர் குத்திக் கொலை.. கேரளாவில் சிபிஎம் மீனவர் வெட்டிக் கொலை

இரண்டு அரசியல் கொலைகளால் கேரளாவும், கர்நாடகமும் பதட்டமாகியுள்ளன. அரசியல் கொலைகளுக்கு
கேரளா
மிகவும் பிரபலம். தற்போது அதே நிலையை கர்நாடகமும் எட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கர்நாடகத்தின் ஷிவமோகமா மாவட்டத்தில் 26 வயதேயான பஜ்ரங் தளம் தொண்டர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஷிவமோகாவில் பதட்டம் நிலவுகிறது. கொலை சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு கும்பல் கல்வீச்சு மற்றும் கலவரத்தில் இறங்கியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், முஸ்லீம் குண்டர்கள்தான் இந்தக் கொலை செய்துள்ளதாக கூறியிருப்பது மேலும் பதட்டை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. ஈஸ்வரப்பாவின் இந்த கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத ரீதியிலான மோதலை ஈஸ்வரப்பா தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈஸ்வரப்பா தனது பேட்டியின்போது கூறுகையில், கொல்லப்பட்ட ஹர்ஷா ஒரு சாதாரண டெய்லர். அவரை முஸ்லீம் குண்டர்கள்தான் கொன்றுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின்பேரில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. இதை நாங்கள் சும்மா விட மாட்டாம், பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

ஆனால் ஹர்ஷா கொலைக்கும், கர்நாடக ஹிஜாப் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ஹர்ஷாவுக்கும், கொலையாளிகளுக்கும் இடையே ஏற்கனவே நல்ல பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதகா கருதுகிறோம். இந்தக் கொலை தொடர்பாக தொட்டபெட்டே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது என்றனர்.

கேரளாவில் மீனவர் கொலை

மறுபக்கம் கேரளாவில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கமாக அரசியல் கொலைகள் நடைபெறும் கன்னூரில்தான் இந்தக் கொலையும் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மீனவரின் பெயர் ஹரிதாசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வ்நதார். இவர் புன்னூல் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்தபோது அதிகாலை ஒன்றரை மணியளவில் ஒரு கும்பல் வந்து அரிவாளால் வெட்டியது. அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஹரிதாசனின் வயது 54 ஆகும்.

இந்தக் கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு பாஜகவினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டது. அதன் எதிரொலியாக இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

பாஜகவினரே இந்தக் கொலைக்குக் காரணம் என்று சிபிஎம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இதை மறுத்துள்ளது. இந்தக் கொலையைத் தொர்ந்து தலசேரி நகராட்சிப் பகுதியிலும், நியூ மாஹே பஞ்சாயத்துப் பகுதியிலும் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது சிபிஎம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.