நமது சொந்த மக்களை நாம் கைவிட்டு விடக் கூடாது: ராகு காந்தி!

உக்ரைன்
மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை குறி வைத்து பல்முனைத் தாக்குதலை வீரர்கள் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைன் தனது வான் எல்லையை மூடிய நிலையில், அதன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, ருமேனியா, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மொத்தம் ஐந்து விமானங்கள் மூலம் இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி
ராகுல் காந்தி
கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, “இந்தக் காணொளிகளைப் பார்க்கும் போது இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நான் வருந்துகிறேன். எந்த பெற்றோருக்கும் இது போன்ற நிலைமை வந்துவிட கூடாது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். நமது சொந்த மக்களை நாம் கைவிட கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, உக்ரைனில் இருந்து
இந்திய மாணவர்கள்
அண்டை நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக பல்வேறு வீடியோக்கள் வெளியான நிலையில், ராகுல் காந்தி விரிவான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.