உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது; இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நமது தற்சார்பு நிலைத்தன்மையில் இருந்து கோவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது, அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் தனித்தனியான துறை அல்ல. பொருளாதாரத் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதே போல் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்தல் தொடர்பான பார்வையில் நவீன தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கினை வகிக்கிறது.

நாட்டு மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. நாட்டினை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலிக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் தற்சார்பு இந்தியாவின் முக்கியத்துவம் பற்றி பேசுவதை அதிபர் பைடனின் அண்மைக்கால உரை கோடிட்டுக் காட்டுகின்றன.
புதிய உலக நடைமுறை வளர்ந்து வரும் நிலையில், தற்சார்பு இந்தியா மீதான கவனத்துடன் நாம் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவுகளுக்கான நடைமுறைகள், ட்ரோன்கள், செமி கடத்திகள், விண்வெளி தொழில்நுட்பம், மரபணு ஆய்வு, மருந்து தயாரிப்பு, 5ஜி வரையிலான தூய்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வலுவான 5ஜி செயல்முறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உத்தேசங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம், பிஎல்ஐ திட்டங்களுக்கு தெளிவான வரைபடத்தை பட்ஜெட் அளித்துள்ளது. இந்தத் துறையில் தனியார் துறையினர் தங்களின் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

அறிவியல் அனைவருக்குமானது, தொழில்நுட்பம் உள்நாட்டுக்கானது. அறிவியலின் கோட்பாடுகளை நாம் அறிந்துள்ளோம். ஆனால் வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு கட்டுமானம், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், கண்ணாடி இழை வடங்கள் இந்த முக்கியமான துறைகளில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பட்ஜெட் அனிமேஷன் காட்சிப் பதிவுகள், பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. அதே போல் இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகளின் தேவையையும் உள்ளது. தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ஃபின்டெக் மையத்தன்மை இவை இரண்டுக்கும் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறைக்க வேண்டும்.

சீர்திருத்தம் காரணமாக உருவாகியிருக்கும் புவிசார் தரவுகள் மற்றும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான விதிகள் மாற்றத்தை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள தனியார் துறையினர் முனைய வேண்டும்.

நமது தற்சார்பு நிலைத்தன்மையிலிருந்து கோவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது.

இளைஞர்களுக்கு திறன் வழங்குதல், மறுதிறன் அளித்தல், திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இணையப்பக்கம் ஒன்றுக்கும் இந்த பட்ஜெட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நம்பகமான திறன், ஆதாரங்கள், பணம் செலுத்துதல், கண்டுபிடிப்பு படிநிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏபிஐ மூலமாக இளைஞர்கள் சரியான வேலைகளையும், வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.