ஆப்ரேஷன் கங்கா: இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் தாயகம் வந்தடைந்தது!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஆப்ரேஷன் கங்கா
என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களின் சிறப்புவிமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 8000க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை மீட்கும் பணிகளை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். அதன்படி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைந்து மீட்கும் பொருட்டு, விமானப்படை விமானங்களும் களம் இறக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அழைப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான சி17 ரக விமானங்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து மாணவர்கள் உள்பட 200 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான முதல் விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹின்டன் விமானப் படை தளத்தில் நேற்றிரவு தரை இறங்கியது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாணவர்களை வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், விமானப்படைக்கு சொந்தமான மேலும் மூன்று விமானங்கள் இந்திய மாணவர்களுடன் இன்று காலையில் தலைநகரில் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது விமானம் 220 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.