ஒரு மாவட்ட செயலாளருக்கு ஒரு மண்டலம் – மாநகராட்சியில் பதவிகளுக்கு மதுரை திமுகவின் அடுத்த ‘ரேஸ்’

மதுரை: மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மண்டலத் தலைவர்கள் பதவிக்கு அடுத்தக்கட்டமாக திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக இந்திராணி பொன்வசந்த் அறிவிக்கப்பட்டார். அதனால், மேயர் வேட்பாளர் போட்டியில் இருந்த மற்ற கவுன்சிலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அடுத்தக்கட்டமாக அவர்கள், மண்டலத் தலைவர்கள் பதவிக்கு முயற்சி செய்து வருகின்றனர். மாநகராட்சியில் மொத்தம் 5 மண்டலங்கள் உள்ளன. மேயர் வேட்பாளர் பரிந்துரையில் மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக கட்சி மேலிடம் பெரியளவில் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை.

அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் திமுக மேயர் வேட்பாளராக இந்திராணி பொன்வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் மாவட்ட செயலாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி மாநகர் வார்டுகளை உள்ளடக்கிய மாநகர பொறுப்பாளர்கள் 2 பேர், புறநகர் வார்டுகளை உள்ளடக்கிய புறநகர் மாவட்டச் செயலாளர்கள் 2 ஆகியோருக்கும், அமைச்சர்களுக்கும் பிரதிநிதித்தும் வழங்கும் வகையில் அவர்கள் பரிந்துரை அடிப்படையில் மண்டலத் தலைவர்கள் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் மாநகர பொறுப்பாளர்கள் பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் பரிந்துரையில் தலா ஒரு மண்டலத் தலைவர்கள், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் பரிந்துரையில் தலா ஒரு மண்டலத் தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர் என்ற அடிப்படையில் பி.மூர்த்தி மாவட்டச் செயலாளராக இருப்பதால் அந்த கோட்டாவிலே அவருக்கு ஒரு மண்டலத்தலைவர் வழங்கப்பட்டு விட்டதால் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் 5-வதாக ஒரு மண்டலத் தலைவர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், மண்டலத் தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுக கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்களை், அமைச்சர்களை ஆதரவு பெற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.