"ரஷ்யா இந்தியாவால் தண்டிக்கப்பட வேண்டும்" – துப்பாக்கி ஏந்திய உக்ரைன் எம்.பி. நம்பிக்கை

“இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் சக்தியாக இந்தியா இருக்கும்” என்று உக்ரைன் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படையினருக்கு எதிராக தற்போது அங்குள்ள பொதுமக்களும் கைகளில் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர்.
image
இது, ரஷ்ய ராணுவத்தினரின் முன்னேற்றத்தை பல இடங்களில் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவம் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம் என இரு முனை தாக்குதலை ரஷ்யப் படையினர் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனைச் சேர்ந்த இளம் எம்.பி.யான ஸ்வியாட்டோஸ்லாவ் யுராஷும் உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக துப்பாக்கியை ஏந்தி களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகிறார். இதுதொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
image
இந்நிலையில், இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் இன்று பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வரை நாங்கள் ஆயுதத்தை கைவிட மாட்டோம். உயிர் இருக்கும் வரை தாய்நாட்டுக்காக போராடுவோம். இந்த போர் சூழலில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க நாடு இந்தியா. உக்ரைன் மக்களுக்காக இந்தியா செய்து வரும் மனிதாபிமானமிக்க உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நூற்றாண்டை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இந்தியா விளங்குகிறது.
உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் தாங்கள் எடுத்து வரும் நிலைப்பாட்டை இந்திய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்துக்காக மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபர் புதின் கடந்த 20 ஆண்டுகளாக செய்து வரும் மனிதநேயமற்ற செயல்களுக்காக அந்நாட்டுடனான உறவு குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும். தனது தவறுக்காக ரஷ்யா இந்தியாவால் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.