ரஷ்யா-உக்ரைன் போர்: அமைதி உடன்படிக்கையை எதிர்நோக்கும் உக்ரைன்!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன. கார்கிவ் நகரிலும் ரஷ்யாவின் குண்டுவீச்சு தொடர்கிறது. அதிகரித்து வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில்  அமைதி உடன்படிக்கைக்கான வாய்ப்பு உள்ளது என உக்ரைன்  எதிர்பார்க்கிறது.

ரஷ்யப் படைகளால் சூழப்பட்ட உக்ரைனின் மரியுபோலில் இருந்து பாதுகாப்பான மனித நடைபாதை வழியாக சுமார் 20,000 பேர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது வரை உக்ரைனை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியுள்ளது.

செவ்வாயன்று உக்ரேனிய மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையே வீடியோ கான்பரன்ஸ் பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து, ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை புதன்கிழமை மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதியை ஏற்படுத்து மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கு மேலும்  13.6 பில்லியன் டாலர் அளித்து உதவி செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைனின் அனைத்து நட்பு நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும், ரஷ்யாவின் மீது மேலும் அதிக தடைகள் விதிக்கப்பட வேண்டும், ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் பறப்பத்தறகு தடை விதிக்கும் வகையில் உக்ரைன் மீது வான்வெளியை மூட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

செவ்வாயன்று ரஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லைக்குள் மேலும் ஊடுருவ முடியவில்லை என்றாலும், நகரங்கள் மீது கடுமையான ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்தன என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  கூறினார். செவ்வாயன்று 28,893 குடிமக்கள் 9 வது பாதுகாப்பான மனித வழித்தடத்தின் வழியாக தப்பித்து சென்றனர் என்றாலும், ரஷ்யா அவர்களை மரியுபோலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

கிவ் நகரில்  ரஷ்யப் படைகள் அழிவை ஏற்படுத்தி வருகின்றன.  ரஷ்ய துருப்புக்கள் கீவ் மீது குண்டுவீச்சு தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒரு சுரங்கப்பாதை நிலையம் மற்றும் பிற பொதுமக்களின் தளங்கள் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில், நேற்றிரவு கியேவில் பயங்கர வெடிகுண்டுகள் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மூத்த அதிகாரி செவ்வாயன்று ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாகக் கூறினார். ரஷ்யா தனது தொனியை மாற்றிக்கொண்டுள்ளது என்றும், உக்ரைனை சரணடையுமாறு கோருவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

உக்ரைன் வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (NATO) இணையும் தனது முயற்சியை கைவிட வேண்டும் என்று ரஷ்யா தனது கோரிக்கையை வலியுறுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூறினார். உக்ரைனில் நடந்து வரும் போரில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.