மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்; ரூ.1.5 லட்சம் அபராதம்: கேரள போக்ஸோ நீதிமன்றம்

ஆலப்புழா: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 1.5 லட்சம் அபராதம் விதித்து ஆலப்புழா சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சேர்தலா பகுதியைச் சேர்ந்த நபர் தனது 6 ஆம் வகுப்பு பயிலும் மகளை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமியின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை உணர முடியவில்லை.
இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்த உறவினர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரையடுத்து சிறுமியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்தது உறுதியானது. இதனையடுத்து தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஆலப்புழா சிறப்பு போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.இஜாஸ், சிறுமியின் தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தார். இதில் ரூ.1 லட்சம் சிறுமியின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அரசுத் தரப்பில் இந்த வழக்கில் வழக்கறிஞர் எஸ்.சீமா வாதாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.