பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

புதுடெல்லி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதன்பின்னர் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். 
இந்த சந்திப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டானின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம் இது. பிரதமருடனான இன்றைய சந்திப்பின்போது அவரிடம் தமிழகம் சார்ந்த 14 அம்ச கோரிக்கைகளை வழங்கினேன். குறிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம். மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்
கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ் மாடல் பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன். 
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி குறித்து உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் கூறி உள்ளேன். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வு கூடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருவதாக கூறி உள்ளார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.