பேருந்தில் மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற நபர்-போலீஸ் கண்முன்னே சரமாரியாக பளார் விட்ட பெண்

பேருந்து பயணத்தின்போது மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கண் முன்னே நெல்லையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் வெளுத்து வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 38 வயதான இவர், இன்று நெல்லைப் பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண் பயணி, மணிகண்டனை கடுமையாக திட்டி தாக்கியுள்ளார். உடனே, சக பயணிகளும், அந்தப் பெண் பயணியுடன் சேர்ந்து, மணிகண்டனை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும், ஆத்திரம் குறையாத அந்தப் பெண், போலீசார் கண்முன்னேயே மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
image
பின்னர் போலீசார், மணிகண்டனை மீட்டு, அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தற்போது மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. பொது இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை தனி ஆளாக எதிர் கொண்ட பெண்ணின் இந்தச்செயலை அங்கு இருந்த மக்கள் பாராட்டியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.