இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 12 பேரை விரைந்து மீட்க வேண்டும்: அன்புமணி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், “ வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மார்ச் 29-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் கைதுகளை அனுமதிக்கக்கூடாது. மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண அண்மையில் இரு நாட்டு கூட்டு பணிக்குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர்கள் மீது கடுமை காட்டக்கூடாது என இந்தியா கூறிய பிறகும் கைது தொடர்வது நியாயமல்ல. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.