திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லானம் பகுதியை சேர்ந்தவர் ஆன்டோஜி. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம்- கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான முன்பதிவு டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். அவரது டிக்கெட்டை பரிசோதித்த பரிசோதகர், அது முறையான டிக்கெட் இல்லை என்று கூறி ₹ 4780 அபராதம் விதித்தார். அபராதத்தை கட்டாவிட்டால் ரயிலிலிருந்து அனைவரையும் இறக்கி விடுவேன் என்று டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார். இதையடுத்து ஆன்டோஜி வேறு வழியில்லாமல் அபராதத் தொகையை கட்டினார். பின்னர் இதுகுறித்து எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு ஆன்டோஜிக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் ஆன்டோஜிக்கு நஷ்டஈடு வழங்க ரயில்வே மறுத்தது. இதை எதிர்த்து அவர் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் பயணிக்கு ரூ 59,730 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து 8 வருடங்களுக்கு பிறகு ஆன்டோஜிக்கு நஷ்டஈட்டுத் தொகையை ரயில்வே வழங்கியது.