சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அது குறித்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டதாக தெரிவித்த அரசு, இது குறித்த கொள்கையை வகுக்க அவகாசம் கோரியிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, அம்மரங்கள் அகற்றும் பணி துவங்கி விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசு மேலும் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிமன்றம், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது.