புதுடெல்லி: கடந்த 1996ம் ஆண்டு தேவகவுடா தலைமையிலான அப்போதைய அரசு மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்தது. இந்த மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும். கடந்த 1988, 1999, 2008ல் இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. எனினும் 2014ம் ஆண்டு மசோதா காலாவதியானது. இந்நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்தள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரக் ஓ பிரைன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘56 இன்ச் மோடி அரசுக்கு தைரியம் இருந்தால் ஏப்ரல் 8ம் தேதிக்கு முன்னர் மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். விதி 168ன் கீழ் மசோதாவை அறிமுகம்செய்வதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.