சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை 59ஆவது வார்டு திமுக நிர்வாகியான சௌந்தராஜன், பிராட்வே பேருந்து நிலையத்தில் கரும்புச்சாறு கடை நடத்திவந்த நிலையில், அங்கு பயணிகளுக்காக தண்ணீர்பந்தல் அமைப்பதில் அவருக்கும் அதிமுக பிரமுகரான கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் சௌந்தர்ராஜன் நின்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்த நிலையில், கணேசன் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.