பெங்களூரு : ‘கொரோனா போய்விட்டதாக கருதி, முக கவசத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். கட்டாயமாக முக கவசம் அணியுங்கள்,’ என கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.இது தொடர்பாக கொரோனா தொழில்நுட்ப கமிட்டி தலைவர் சுதர்சன் கூறியதாவது:
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மூன்றாவது அலை குறைந்துள்ளதால், முக கவசம் அணிவதை மக்கள் விட்டுள்ளனர். முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிப்பதை நிறுத்த சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.கர்நாடகாவில் முக கவசம் அணியும் விதிமுறையை நீக்கும்படி, வல்லுனர் கமிட்டி சிபாரிசு செய்யவில்லை. முக கவசம் அணிவது அவசியமில்லை என, அரசும் கூறவில்லை.முக கவசம் விதிமுறையை நீக்க வேண்டாம் என, அரசுக்கு நாங்கள் ஆலோசனை கூறியுள்ளோம்.சூழ்நிலை அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காற்று, வெளிச்சம் சரியாக இல்லாத இடங்கள், மக்கள் நெரிசலான பகுதிகள், மருத்துவமனைகளில் முக கவசம் அணிவதை நீட்டிக்க வேண்டும்.கர்நாடகாவில் தொற்று, கட்டுக்குள் வந்திருக்கலாம். இதிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சர்வதேச பயணம், வர்த்தக நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தற்போது தொற்று அறிகுறி உள்ளோர் மட்டும், பரிசோதிக்கப்படுகின்றனர். அறிகுறி தென்படாத நோயாளிகளை அடையாளம் காண்பதில்லை. மூன்றாவது அலை முடிந்துள்ளது. ஆனால் தொற்று முடியவில்லை.பல நாடுகளில் தொற்று தீவிரமடைந்துள்ளது. நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து துவங்கியுள்ளது. ஜூனில் நான்காவது அலை பரவும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் முக கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement