இலங்கை புதிய நிதியமைச்சரின் திடீர் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் புதிய நிதியமைச்சராக நேற்று (ஏப்.,4) பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்திற்குள் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதையடுத்து, இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி, கடந்த 1ம் தேதி நள்ளிரவு பிரதமர் உத்தரவிட்டார். இதற்கிடையே நெடுக்கடி நிலைக்கு பொறுப்பேற்று, மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். நிதியமைச்சரும், தன் சகோதரருமான பசில் ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி நீக்கம் செய்தார்.

latest tamil news

இதனையடுத்து ஜி.எல்.பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்தனே கல்வி அமைச்சராகவும், ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் நேற்று பொறுப்பேற்றனர். அதேபோல், சட்டத்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். நேற்று பதவியேற்ற அவர், இன்று திடீரென நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் நிதியமைச்சர் ராஜினாமா செய்துள்ளதால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

பெரும்பான்மை இழப்பு

latest tamil news

இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுடன் இன்று பார்லிமென்ட் கூடியது. அப்போது பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டன. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட பார்லி.,யில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ராஜபக்சே அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன. இதனால், 43-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.