மக்களின் துன்பங்களை பார்க்கும்போது இலங்கை பிரஜை என்ற முறையில் எனக்கு வருத்தமாக உள்ளது!: பாலிவுட் நடிகை கவலை

மும்பை: இலங்கை மக்களின் துன்பங்களை பார்க்கும்போது நான் இலங்கை பிரஜை என்ற முறையில் வருத்தமாக உள்ளது என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கவலையுடன் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த மாடல் அழகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டில், ‘மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா’ பட்டத்தை வென்றார். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், இலங்கை கொடியை பலர் கரங்களால் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது நாட்டு மக்களை பார்க்கும் போதும் மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை பிரஜையாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும் போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய நாட்டு மக்கள் யாருடைய தீர்ப்பையும் விரும்பமாட்டார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும். அதனால் நிறைய பலன் கிடைக்கும்’ என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.