கொமரம் பீமின் சொந்த ஊரில் ஆர்ஆர்ஆர் பார்த்த ராஜமவுலி
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் என்கிற சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி இந்தப்படத்தின் இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திரங்களையும் ராஜமவுலி உருவாக்கி இருந்தார். இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்.
இந்தப்படம் உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்த கொமரம் பீமின் சொந்த ஊரான ஆசிபாபாத் பகுதி ரொம்பவே பிரபலமாக மாற துவங்கியது.. அங்கே கொமரம் பீம் மாவட்டம் என்கிற பெயரில் ஒரு புதிய ஏரியாவே உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, முப்பது வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக அங்கே ஒரு திரையரங்கும் கட்டப்பட்டு அதில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் ஓடிகொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது ஆசிபாபாத்துக்கு தனது மனிவியுடன் சென்ற ராஜமவுலி, அங்கே கொமரம் பீம் பகுதியில், அவரது பெயரிலேயே புதிதாக உருவாகி இருந்த கே.பீ திரையரங்கில் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் அங்கிருந்த மக்களுடன் உரையாடிய ராஜமவுலி இங்கே வந்து உங்களுடன் அமர்ந்து இந்தப்படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.