இலங்கையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். அங்கு, 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.
பொருளாதார நெருக்கடிக்கு, இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என, குற்றம் சாட்டும் பொதுமக்கள், அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை
அதிபர் மாளிகை எதிரே 9வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
‘எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை!’ – பிரதமர் குட் நியூஸ்!
இந்நிலையில், இலங்கையில் ஒரு வாரத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே, உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.