பெங்களூரு: அடுத்த ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, பெங்களூரு பானஸ்வாடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை, அக்கட்சி தேசிய தலைவர் சரத் பவார் நேற்று திறந்து வைத்தார். ”சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவோம்,” என அவர் கூறினார்.ரூ.11,513 கோடி திட்டங்கள்பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், கர்நாடக உயர்மட்ட கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. 11 ஆயிரத்து, 513 கோடி ரூபாய்க்கு, 10 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், 46 ஆயிரத்து, 984 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்ச அதிகாரி சிக்கினார்
பெங்களூரு: பெல்லந்துாரை சேர்ந்த உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் ஒருவர், வர்த்துாரில் அமைக்கப்பட்டுள்ள லே – அவுட்டில் மின்மாற்றி இணைப்பு கொடுக்க உதவி பொறியாளர் நவீனிடம் விண்ணப்பித்தார். அவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் ஏ.சி.பி., ஊழல் ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் போது கையும், களவுமாக பொறியாளர் பிடிபட்டார்.
ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 25 முதல், மே 21 வரை கோடை விடுமுறை அறிவித்து பதிவாளர் பரத்குமார் நேற்று உத்தரவிட்டார். வரும், 26, 28, மே 5, 10, 12, 17 ஆகிய நாட்களில் அவசர வழக்கு விசாரணைக்காக காலை 10:30 மணிக்கு பெங்களூரு முதன்மை நீதிமன்றம் மட்டும் செயல்படும்.
Advertisement