15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழப்பு – காரணங்கள் என்ன?

தமிழகம் முழுவதும் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் உயிரிழப்புக்கு காரணங்கள் என்ன? பார்க்கலாம் இந்தத்தொகுப்பில்.

தமிழகம் முழுவதும் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 101 யானைகளும், 2022 ஜனவரி 1 முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை 30 யானைகளும் உயிரிழந்துள்ளன. இதில், அதிகபட்சமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 20 யானைகள், கோவை வனக்கோட்டத்தில் 18 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 15 மாதங்களில் உயிரிழந்த யானைகள் தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக சூழலியலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, வனத்துறையால் அமைக்கப்பட்ட நால்வர் குழுவிடம் முதல் கட்ட அறிக்கையை அளித்துள்ளனர். இதில், 118 யானைகள் இயற்கை காரணங்களால் உயிரிழந்ததாகவும், பெரும்பாலும் வறட்சி காலங்களில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
90 சதவீத யானைகளின் உயிரிழப்பு இயற்கையாக ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 6 யானைகள், ரயில் மோதி 4 யானைகள், சாலை விபத்தில் ஒரு யானை, நாட்டுவெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு போன்ற காரணங்களால் 2 யானைகள் உயிரிழந்துள்ளன. ஒரு வயதுக்கு கீழ்16 யானைகளும், ஒன்று முதல் 5 வயது வரை 17 யானைகளும், 5 முதல் 15 வயது வரை 19 யானைகளும், 15 வயதுக்கு மேற்பட்ட 79 யானைகளும் இந்த காலகட்டத்தில் இறந்துள்ளன. உயிரிழந்த இளம் யானைகளின் உடற்கூறு அறிக்கைகளை ஆய்வு செய்தால்தான் அவற்றின் மரணத்துக்கு என்ன காரணம் எனத்தெரியவரும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 2021-22-ம் நிதியாண்டில் தமிழகத்தில் மனித-விலங்கு மோதலால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவை வனக்கோட்டத்தில் 12 மனித-விலங்கு மோதல்கள் நடைபெற்றுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.