கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனிப்படை விசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் சசிகலா உட்பட இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது,

பின்பு வழக்கை விசாரணை செய்த பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை ஜீன் மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் சசிகலா உட்பட இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக மேலும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் அவ்வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரினோம். இதனை ஏற்ற பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் இவ்வழக்கினை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.