“கர்நாடகத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உ.பி, ம.பி மாடலை பின்பற்ற வேண்டும்!" – பாஜக தலைவர்

பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், சமீப காலங்களில் ஹிஜாப் பிரச்னை, இந்து கோயில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை மற்றும் ஹலால் விவகாரம் என வகுப்புவாத வன்முறைகள், கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், `கர்நாடகாவில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப்பிரதேச மாடலை பின்பற்ற வேண்டும்’ எனக் கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய நளின்குமார் கட்டீல், “இதுவொன்றும் சாதியைப் பற்றியதோ… மதத்தை பற்றியதோ இல்லை… ஆனால், வகுப்புவாத பதற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு வாகனங்களுக்கு தீ வைத்தல், சேதப்படுத்துதல் என வன்முறைகளைத் தூண்டுபவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசாங்கம் மற்றும் சட்டத்தின் பயத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் நளின்குமார் கட்டீல்

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும்போது, அவற்றைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப் பிரதேச மாடலை நாமும் மாநிலத்தில் பின்பற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பா.ஜ.க பிரமுகர் தற்கொலை விவகாரத்தில், பா.ஜ.க மீது காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய நளின்குமார், “அரசை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. தவறுகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு, அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.