பாதிப்பு குறைந்த நிலையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருவதால் 4வது அலைக்கான அறிகுறியா? நிபுணர் கருத்து

ஜலந்தர்: கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருவதால், ஒமிக்ரானின் 4வது அலைக்கான அறிகுறியா என்பது பற்றி நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சில மாதங்கள்தான் தொற்று பரவல் குறைந்து மக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் கவலையில் உறைந்துள்ளனர். இந்நிலையில், தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அதிரடியாக 90 சதவீதம் அதிகரித்தது. 2 வாரங்களாக தினமும் பாதிப்பு அதிகரிக்கிறது. இது 4வது அலை பற்றிய கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெருந்தொற்று நோயானது, வெறும் உயிரியல் மருத்துவ ரீதியிலானது அல்ல; அது பொருளாதாரம், அரசியல் சார்ந்ததும் கூட. டெல்டாவுடன் ஒப்பிடுகையில், புதிய அலையை நாடு காண்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், தொற்றை ஏற்படுத்துகிற வைரஸ்கள், ஒமிக்ரானில் இருந்து மாறுபட்டவை. ஒமிக்ரான் வைரசை காட்டிலும் பிஏ.2 வைரஸ், 2 முதல் 20 சதவீதம் வரையில் அதிக தொற்றை ஏற்படுத்தும். ஒமிக்ரானில் இருந்து 4வது அலை வராது. அது அதிகரிக்கும் மாற்றத்துக்குட்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இதனால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பெரிய அலையும், ஒரு உரு மாறிய வைரசுடன் தொடர்புடையது. ஆல்பா, டெல்டா வைரஸ்களை விட ஒமிக்ரான் அதிகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துள்ளது. அவர்களுக்கு இணைநோய் இல்லாதபோது, தொற்று பாதித்தாலும் சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகள்தான் இருக்கும். சுகாதார நெருக்கடிகளை தடுப்பதற்கு, இந்தியா தொற்று நோயின் சில அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும். மக்களிடையே ஏற்கனவே நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது. இருந்தாலும், அசாதாரண உயர்வு ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.