சென்னையில் தவறான நம்பர் பிளேட்கள் கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தவறான நம்பர் பிளேட்டுகள் கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல்துறை சென்னை மாநகரில் விபத்துக்களைக் குறைப்பதற்காகவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக (Defective Number Plates) இருக்கிறது. குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கி விதி மீறல்களில் ஈடுபடும் போதும் விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்வது அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

எனவே பிழையான பதிவெண் தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (மே 1) அன்று சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டு அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கியதாக 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (No Parking) 215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறையின் வடக்கு மாவட்டத்தில், குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் பொருத்தியதாக 310 வழக்குகள், மடக்கி வைக்கும் வாகன எண் பலகை உள்ளதாக 4 வழக்குகள், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக 96 வழக்குகள் என மொத்தம் 410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு மாவட்டத்தில், குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் பொருத்தியதாக 300 வழக்குகள், மடக்கி வைக்கும் வாகன எண் பலகை உள்ளதாக 5 வழக்குகள், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தொடர்பாக 68 வழக்குகள் என மொத்தம் 373 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், கிழக்கு மாவட்டத்தில், குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் பொருத்தியதாக 202 வழக்குகள், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தொடர்பாக 51 வழக்குகள் என மொத்தம் 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் பொருத்தியதாக 812 வழக்குகள், மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டதாக 9 வழக்குகள், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக 215 வழக்குகள் என மொத்தம் 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன விதிகளின்படி, வாகன பதிவு எண் தகடை பொருத்த வேண்டுமெனவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தங்களது வாகனங்களை நிறுத்தும் படியும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.