இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும் என்று, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த வாழ்த்து செய்தியில், “ரமலான் பெருநாள் வாழ்த்துகள்! – ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து பசித்திருப்பவனின் வலியை உணர்ந்து கொள்கிறார்கள். மேலும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுக்கிறார்கள்.
இதன் வழியாக ஈகையினால் கிடைக்கிற இன்பத்தை பெருகிறார்கள். உறவுகளிடம், நண்பர்களிடம் பகை மறந்து அன்பு செலுத்துகிறார்கள். இந்த சிறப்புகளோடு இறைவனை வணங்கி ரமலானைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும். நெஞ்சார்ந்த ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.