மெகுல் சோக்சி மீது கூடுதல் வழக்கு: சிபிஐ தொடர்ந்தது

புதுடெல்லி: வைர வியாபாரி மெகுல் சோக்சி அவரது உறவினர் நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் மோசடி செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பியோடினர். இது தொடர்பாக அவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிராவில் உள்ள சோக்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்திய தொழில் நிதி கழகம் அளித்த புகாரில், `மெகுல் சோக்சி கடந்த 2016ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெறுவதற்காக பங்கு பத்திரங்கள், தங்கம்,  வைரங்களை அடகு வைத்தார். இதனை 4 வேறு நகை மதிப்பீட்டாளர்களிடம் கணக்கிட்ட போது அவை ரூ.34-45 கோடி பெறும் என்று மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், ரூ.25 கோடி கடன் வழங்கப்பட்டது. சோக்சி கடனை திருப்பி செலுத்தாத நிலையில், பங்குகள் பத்திரத்தை விற்றதன் மூலம் ரூ.4.07 கோடி மட்டுமே மீட்க முடிந்தது. மீதமுள்ள தொகை கடந்த 2018ல் வராக்கடனாக அறிவிக்கப்பட்டதால் வங்கிக்கு ரூ.22 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகைகளின் மதிப்பை கூட்டி காண்பித்து கடன் மோசடி செய்த சோக்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.