பீகாரில் பி.கே., போடும் பலே கணக்கு: நடந்து சென்று ஆட்சியை பிடிக்க திட்டமா?

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றியும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கான ஒரு செயல்திட்டத்தை பற்றியும் விளக்கினார். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கட்சியில் சேர
பிரஷாந்த் கிஷோர்
மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதன் தொடர்ச்சியாக, “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது! தற்போது, பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. ஜான் சுராஜ்-மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. ஷுருஆத் #பிஹார் சே.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டார்.

இதன்மூலம், பிரஷாந்த் கிஷோர் புதிய கட்சித் தொடங்கவுள்ளதாகவும், அவரது அரசியல் பயணம்
பீகார்
மாநிலத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் மேற்கு சம்பாரனில் உள்ள மகாத்மா காந்தியின் பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிரஷாந்த் கிஷோர், அவர்களின் கூட்டு ஆட்சியினால்தான் பீகார் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்றார். பீகாருக்கு புதிய சிந்தனை மற்றும் புதிய முயற்சிகள் தேவை, பீகார் மக்கள் ஒன்றிணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்றும் பி.கே., வேண்டுகோள் விடுத்துள்ளார். “பீகாரில் மாற்றத்தை கொண்டு வர ஆர்வமுள்ள மக்களுக்கு பொதுவான தளத்தை” வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தொடர்ந்து பேசிய பிரஷாந்த் கிஷோர், “நாங்கள் கிட்டத்தட்ட 17,000 பேரைத் தொடர்பு கொண்டுள்ளோம். நான் அவர்களைச் சந்திக்கப் போகிறேன். கடந்த 3 நாட்களில் நான் ஏற்கனவே 150 பேரை சந்தித்துள்ளேன். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு பிரிவினரை சேந்தவர்கள் என்னை சந்தித்துள்ளனர். எனது முதல் அறிவிப்பு என்னவென்றால், அடுத்த சில நாட்களில் நான் இந்த மக்களை சந்தித்து, பீகாரின் வளர்ச்சிக்கான அவர்களின் யோசனைகளை அறிந்து கொள்ளவுள்ளேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைக்கு கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள பிரஷாந்த் கிஷோர், தனது
ஜான் சுராஜ்
பிரசாரத்தில் சேருபவர்கள் கட்சியை தொடங்குமாறு கோரினால், அந்த புதிய அமைப்பில் உறுப்பினராக மட்டுமே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.