சென்னை: குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் போலீஸ் தரப்பில் ஆஜராகும் உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான மெயின் தேர்வு இன்றும் நாளையும் நடக்க உள்ளது. ஆனால், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கு மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வரவில்லை. விண்ணப்பத்தில் அனுபவ சான்று, தந்தையின் சாதி சான்று உள்ளிட்ட விவரங்களை தரவில்லை என்ற காரணங்களால் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வழங்க கோரி சி.ராஜ்குமார், எம்.தனலட்சுமி உள்ளிட்ட 21 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தையின் சாதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், கணவரின் சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது பதிவிடவில்லை என்பது தொழில்நுட்ப காரணமாகும். இதுபோன்ற தொழில்நுட்ப தவறுகளை சுட்டிக்காட்டி ஹால் டிக்கெட் வழங்காமல் இருக்க கூடாது. மனுதாரர்களின் ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி மே 6ம் தேதி இரவு 7 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மனுதாரர்களின் தேர்வு முடிவுகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்கப்பட வேண்டும்.மெயின் தேர்வு முடிந்த ஒருவாரத்திற்குள் மனுதாரர்கள் அரசு பணிகள் தேர்வாணையத்தை நேரில் அணுகி தேவையான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் ஆய்வுதொடர்பான அறிக்கையை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1651872912_Tamil_News_5_7_2022_35433597.jpg)