லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்

09.05.2022
03.30: ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி வலியுறுத்தி உள்ளார். 
இந்த போர் உக்ரைனின் தானிய உற்பத்தியை பாதிக்கிறது என்றும், உணவு நெருக்கடி ஆபத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பு தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
02.20: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர். 
ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ்  இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் காணாலி மூலம் ஆலோசனை நடத்தினர். 
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,  இந்த போரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவை ஜி-7 தலைவர்கள் உறுதிபடுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
இந்த போரில் புதின் வெற்றி பெறுவதை தடுக்க,, ரஷியாவிற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில்,  அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு படிபடியாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.40:  கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்களின் உள்கட்டமைப்பை அழிப்பதில் ரஷிய படைகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
இரு நாடுகளிடையேயான போர் 11 வாரமாக நீடித்து வரும் நிலையில், கருங்கடல் தீவு பகுதியில் ரஷிய நிலைகளை உக்ரேன் ராணுவம் தாக்கியுள்ளது. 
12.30: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், உக்ரைன் சென்றுள்ளார். அன்னையர் தினத்தையொட்டி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கியை ஜில் பைடன் சந்தித்து பேசினார். 
மிருகதனமான இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக தாம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
08.05.2022
21.30: ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைக்கு பல்வேறு உதவிகளை கனடா வழங்கி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது உக்ரைனுக்கு பொருளாதார நிவாரண உதவியாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்குமான வரியை கனடா அரசு நீக்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
16:00: கிழக்கு பகுதியில் உள்ள போபாஸ்னா நகரில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் பின்வாங்கிவிட்டதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் இன்று கூறி உள்ளார். போபாஸ்னாவின் பெரும்பகுதியை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷியாவின் செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் கூறியிருக்கிறார்.
 
15:30: ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நேட்டோ முன்னாள் பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராஸ்மசன் தெரிவித்துள்ளார். 
11:30: உக்ரைனின் பிலோஹோரிவ்கா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்கியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சுமார் 60 பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இத்தகவலை லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார். 
10:00: உக்ரைனுக்கு 1.3 பில்லியன் பவுண்டுகள் (1.6 பில்லியன் டாலர்) கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் கருவூல தலைமை அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.