பெரம்பலூர் பாலக்கரை உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்த காவலர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படம் ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், ஆரி, தன்யா ரவிச்சந்திரன் சிவானி ராஜசேகர், யாமினி சுந்தர், சுரேஷ் சக்ரவர்த்தி, மயில்சாமி, இளவரசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரை சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் பேனர் வைத்துள்ளார். இதனால் பெரம்பலூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் பேனர் வைத்ததால் அவர் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.